விருதுநகர்: விருதுநகரில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் ஹரிஹரன், மாடசாமி, ஜூனத் அகமது, பிரவீன் மற்றும் 4 பள்ளி மாணவர்கள் என 8 பேரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். விருதுநகர் சிபிசிஐடி அலுலகத்தில் விருதுநகர் டிஎஸ்பி அர்ச்சனா, வழக்கு தொடர்பான ஆவணங்களை நேற்று சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இந்நிலையில் இன்று காலை மதுரை சிபிசிஐடி டிஎஸ்பி சரவணன், சிறப்பு புலனாய்வு அதிகாரி வினோதினி, சிறப்பு கண்காணிப்பாளர் முத்தரசி கொண்ட குழுவினர் விருதுநகர் சிபிசிஐடி அலுவலகம் வந்தனர்.
இங்கு கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து, சிபிசிஐடியின் கீழ் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இன்று காலை விருதுநகர் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள சமூக நலத்துறையின் பாதுகாப்பு இல்லத்தில் தங்கியுள்ள பாதிக்கப்பட்ட பெண்ணிடம், சிபிசிஐடி போலீசார் விசாரணையை துவக்கினர். இதனை தொடர்ந்து குற்றவாளிகள் 8 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கும் வகையில், திருவில்லிபுத்தூர் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்ய உள்ளனர்.
8 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கும்போது இவ்வழக்கில் கூடுதல் தகவல்கள் வெளிவரும் எனத்தெரிகிறது.‘இந்த குற்றச்சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தப்படும். கைது செய்யப்பட்டுள்ள நபர்களின் வீடுகள், மெடிக்கல் குடோன்களில் உள்ள செல்போன்கள், லேப்டாப்களை ஆய்வு செய்து, அதில் ஆபாச பதிவுகள் உள்ளதா? அந்த பதிவுகள் யாருடைய செல்போன் எண்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது, இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்ய உள்ளோம். இந்த வழக்கில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும்’ என சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.