நாட்றம்பள்ளி : நாட்றம்பள்ளி அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த சுண்ணாம்புகுட்டை தேசிய நெடுஞ்சாலை வழியாக வாணியம்பாடி நகருக்கு காரில் கடத்தி வந்த அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை நாட்றம்பள்ளி போலீசார் நேற்று முன்தினம் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிவு செய்து வாணியம்பாடி பகுதியில் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
அதில், வாணியம்பாடி டவுன் முகமது அலி பஜார் பகுதியில் மளிகை நடத்தி வரும் தினேஷ் சவுத்திரி(26), ஜீகேந்திரகுமார்(25) ஆகியோரிடம் தீவிரமாக விசாரணை நடத்தியதில், புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்தது தெரிவந்தது. மேலும், அவர்கள் புகையிலை பொருட்களை ஓசூரில் இருந்து கடத்தி வந்து, வாணியம்பாடி பகுதிகளில் சப்ளை செய்து வருவதும் தெரிந்தது.
இதையடுத்து நாட்றம்பள்ளி போலீசார், ஓசூர் பகுதியில் இருந்து புகையிலை பொருட்களை காரில் கடத்தி வந்து, அவர்களுக்கு விற்பனை செய்த ஆசாராம்(26), ரமேஷ்குமார்(32), விவேக்(22) ஆகியோர் உட்பட 5 பேரையும் நேற்று கைது செய்தனர். பின்னர், அவர்களை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.