நெமிலி : நெமிலி கொசஸ்தலை ஆற்றில் கொட்டப்பட்டு இருந்த பிளாஸ்டிக் கழிவுகள் பேரூராட்சி செயல் அலுவலர் தலைமையில் நேற்று அதிரடியாக அகற்றப்பட்டது.
நெமிலி பேரூராட்சியில் உள்ள சில கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள், அங்குள்ள கொசஸ்தலை ஆற்றில் கொட்டப்பட்டு வருகிறது.
இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில், நேற்று பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள், நெமிலி பேரூராட்சியை பிளாஸ்டிக் இல்லாத பேரூராட்சியாக மாற்ற வேண்டும் என உறுதிமொழியை ஏற்று, கொசஸ்தலை ஆற்றில் கொட்டப்பட்டு இருந்த பிளாஸ்டிக்கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அதிரடியாக அகற்றினர். சுமார் 150 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றப்பட்டு உள்ளது.
பின்னர், பேரூராட்சி செயல் அலுவலர் கூறுகையில், `நெமிலி பேரூராட்சியில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வது மற்றும் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும். ஆய்வு செய்யும்போது பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், பொதுமக்கள் யாரும் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்த வேண்டாம். மீறி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது தெரியவந்தால் அபராதம் விதிக்கப்படும்’ என்றார்.