தூத்துக்குடி: ஜெயராஜ் மற்றும் அவர் மகன் பென்னிக்ஸ் இருவரும் சாத்தான்குளம் காவல்நிலையத்திலிருந்து கோவில்பட்டி கிளை சிறைக்கு கொண்டுவரப்பட்ட போதே காயத்துடன்தான் வந்ததாக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிறைக் காவலர் மாரிமுத்து சாட்சியளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கடந்த 2020-ம் ஆண்டு காவல்நிலைய விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டபோது இருவரும் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுவரும் நிலையில் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் கோவில்பட்டி கிளை சிறை காவலர் மாரிமுத்து சாட்சியம் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். தந்தை மகன் ஆகிய இருவரையும் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி காவல்நிலைய விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் விசாரணையின்போது காவலர்கள் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்டம் முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி பத்பநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கின் முக்கிய சாட்சியாக கோவில்பட்டி கிளை சிறைக் காவலர் மாரிமுத்து ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
இதில் தந்தை மகன் இருவரும் சாத்தான்குளத்திலிருந்து வரும்போதே காயத்துடன் வந்தனர் என்றும் பென்னிக்ஸை சிகிக்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றது போலீசார் முத்துராஜா மற்றும் செல்லதுரை ஆகிய இருவரும் தான் சாத்தான்குளத்திலிருந்து அழைத்து வந்தனர் என்றும் காவலர்களை நீதிபதி முன்பு அடையாளம் காட்டி சாட்சியம் அளித்தார் இதை நீதிமன்றம் இதை நீதிமன்றம் முக்கிய சாட்சியாக எடுத்துக்கொண்டது.
அதன் பின்னர் குற்றவாளிகள் தரப்பில் வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணையும் நடைபெற்றது. இதையடுத்து இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.