இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு உடல் முழுவதும் களிமண் சேறு பூசி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வித்தியாசமான முறையில் நகர்வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அதிகாலையிலேயே களிமண் சேறு பூசி சேத்தாண்டி வேஷத்துடன் களிமண் மனிதர்களாகவே மாறி பக்தர்கள் ஊர்வலம் வந்தனர்.
கடந்த 15 நாட்களாக கடும் விரதம் இருந்த சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் உட்பட 1,000-கணக்கானோர் ஊரணிக் கரையில் உள்ள களிமண் சேற்றைக் குழைத்து தலை முதல் கால் வரை அடையாளம் தெரியாத அளவிற்கு பூசி, மேளத்தாளம் முழங்க பேரணியாக சென்று அம்மனை வழிபட்டனர். தற்போது வெளிநாடுகளில் களிமண் குளியல் பிரபலமாக உள்ள நிலையில் கமுதியில் பல நூற்றாண்டுகளாய் களிமண் பூசி சேத்தாண்டி வேடமிட்டு, தமிழர்கள் பாரம்பரிய திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். இதனால் கோடை காலத்தில் வரும் வேர்க்குரு, வேனல்கட்டி, அம்மை உட்பட தோல்நோய்கள் வராமல் உள்ளூர் மக்கள் தங்கள் உடல்நிலையை பாதுகாத்து வருகின்றனர்.