சென்னை: தமிழகத்தில் 19.71 லட்சம் தனிநபர் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி சட்டப்பேரவையில் தெரிவித்தார். சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது எழும்பூர் எம்எல்ஏ இ.பரந்தாமன்(திமுக) பேசுகையில் “தனி நபர் குடும்ப அட்டை வழங்க அரசு முன் வருமா” என்றார். இதற்கு பதில் அளித்து உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது: ஒரு தனி நபர் யாரையும் சாராமல் இருக்க தனி நபர் குடும்ப அட்டை வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு 12 கிலோ அரிசி, 1 பாக்கெட் பாமாயில், 1 கிலோ துவரம் பருப்பு, அரை கிலோ சக்கரை, எரிவாயு இணைப்பு ஆகியவை மானிய விலையில் வழங்கி வருகிறது. தற்போது தமிழகத்தில் 19 லட்சத்து 71 ஆயிரத்து 707 ஒரு நபர் குடும்ப அட்டை புழக்கத்தில் உள்ளன.
பரந்தாமன்: குடும்ப அட்டை தாரர்கள் ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. கைரேகை வைப்பதில் கோளாறா? அல்லது பிஓஎஸ் முறையில் கோளாறா? என்பதை அறிய விரும்புகிறேன். ஓஏபி பெற்றால் அட்டை ரத்தாகுமா?
அமைச்சர் சக்கரபாணி :
திமுக ஆட்சி பொறுப்பேற்ற 10 மாதத்தில் 10.96 லட்சம் பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. ரேசன் அட்டை வைத்திருப்போர் எந்த கடையில் வேண்டுமானாலும் பொருட்கள் வாங்கலாம் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொருட்கள் வழங்குவது கைரேகை சரிபார்க்கும் முறையில் தங்குதடையின்றி செயல்படுத்தப்பட்டு வருகிறது. கைரேகை சரியாக பதிவாகாவிட்டால், பிராக்சி முறையில் பொருட்கள் வழங்கப்படும்.
முதியோர், மாற்றுத்திறனாளிகள் கடைகளுக்கு நேரடியாக வந்து செல்ல முடியாவிட்டால், அவர்களுக்கு பதில் வேறு ஒரு குடும்ப தாரர் பொருட்களை வாங்க அங்கீகார அட்டையும் வழங்கப்பட்டு வருகிறது. தங்குதடையின்றி பொருட்கள் விநியோகம் நடைபெறுகிறது. முதியோர் உதவித்தொகை வாங்குவோருக்கும் ஓஏபி அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.