சென்னை: சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த கண்ணன் என்ற சமூக ஆர்வலர் ஒருவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: சமூக வலைத்தளங்களில் கடந்த 20ம் தேதி நடிகர் அஜித்குமார் நடிக்கும் ‘ஏகே 62’ படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க போவதாக செய்திகள் வெளிவந்தது. அன்று இரவு இயக்குநர் விக்னேஷ் சிவன் வீட்டில் பட்டாசு வெடித்து கொண்டாடி இருக்கிறார்கள்.
அந்த கொண்டாட்டத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் டீம் பட்டாசு வெடித்து கொண்டாடினோம் என்று அவர் அறிவித்துள்ளார். இது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. தமிழக காவல் துறை அதிகாரிகள் ரவுடிகளை ஒழிக்க நடவடிக்கை எடுத்து வரும் வேளையில் ஒரு இயக்குனர் மற்றும் பிரபல நடிகை நயன்தாரா ‘ரவுடி பிக்சர்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருப்பது பொது மக்களிடையே ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
தமிழக காவல் துறை அதிகாரிகள் ஸ்காட்லாந்து போலீசாருக்கு இணையானவர்கள். தமிழகத்தில் நடக்கும் குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி வருகிறார்கள். ரவுடி பிக்சர்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தடை செய்ய வேண்டும். மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா ஆகியோரை கைது செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு யார் அச்சுறுத்தல் செய்தாலும் காவல் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும். அதேபோல் இவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.