காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிறந்தது முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எடை மற்றும் உயரம் கணக்கெடுத்து ஊட்டச்சத்து நிலையை கண்டறியும் முகாம் நேற்று துவங்கப்பட்டது. இந்த முகாம், வரும் 27ம் தேதி வரை அனைத்து அங்கன்வாடி மையங்களில் நடக்கிறது. இதில் குழந்தைகளின் சராசரி உயரத்துக்கு ஏற்ப அவர்களது எடை இருப்பதை உறுதி செய்தல், குறைபாடுகள் இருந்தால் அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்கி ஆரோக்கியமான குழந்தையை வளர்ப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். அதன்படி மாவட்டத்தை சேர்ந்த 77,535 குழந்தைகளின் ஆரோக்கிய நிலை இம்முகாமில் கண்டறியப்படும்.
இதன் துவக்க விழா காஞ்சிபுரம் ஒன்றியம் கீழம்பி அங்கன்வாடி மையத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் ஆர்த்தி முகாமை துவக்கி வைத்து, குழந்தைகளின் எடை உயரம் ஆகியவற்றை கணக்கீடு செய்வதை ஆய்வு செய்தார். கீழம்பி அங்கன்வாடியில் மட்டும் 73 குழந்தைகளுக்கு எடை மற்றும் உயரம் ஆகியவற்றை சரிபார்க்கப்பட்டது. பின்னர், எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு சத்துமாவு, கடலைமிட்டாய் மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் ஆகியவை குழந்தைகளின் பெற்றோரிடம் கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சற்குணம், காஞ்சிபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் மலர்கொடி குமார், துணை பெருந்தலைவர் திவ்யபிரியா இளமது, ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி ராஜசேகர், ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், டாக்டர் காமாட்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.