×

திருவட்டார் அருகே தூங்கும் போது தாயை கட்டையால் அடித்து கொன்ற மகன்-போதையில் தப்ப முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

குலசேகரம் :  திருவட்டார் அருகே தாயிடம் தகராறு செய்து அவரை  கட்டையால்  அடித்து கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.திருவட்டாரை  அடுத்த அருவிக்கரை அருகே உள்ள செப்பள்ளிவிளை  பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (76). இவரது மனைவி சரோஜினி (74). 2 பேரும்  100நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் ஆவர். இவர்களது மகன் விஜயன் (48).ரப்பர்  பால்வெட்டும் தொழிலாளி. இவருக்கு செலினா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

குடும்ப தகராறு காரணமாக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு விஜயனை பிரிந்து  செலினா தனது குழந்தைகளுடன் தனியாக சென்று விட்டார். விஜயன், தனது  பெற்றோருடன் வசித்து வந்தார்.
மது பழக்கத்துக்கு அடிமையான விஜயன்,  தினமும் குடித்து விட்டு வந்து பெற்றோரிடம் தகராறு செய்வார். அப்போது  அவர்களை அடித்தும் உதைப்பார். இந்த தகராறு ஏற்படும் சமயங்களில் தேவராஜ்,  வீட்டில் இருந்து வெளியே சென்று விடுவார்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் காலை அந்த  பகுதியில் உள்ள கூட்டுறவு கடன் சங்கத்தில் இருந்து விஜயன் ₹10 ஆயிரம்  கடன் வாங்கி உள்ளார். இந்த பணத்துடன், மது குடிக்க சென்றுள்ளார். போதையில்  பணத்தை எங்கேயோ தவற விட்டதாக கூறப்படுகிறது. மாலையில் வீட்டுக்கு  வந்த விஜயன், தனது தாயிடம் ரூ.10 ஆயிரம் எங்கே என்று கேட்டு தகராறு  செய்துள்ளார். அப்போது அவர் எந்த பணத்தையும் தான் பார்க்க வில்லை என கூறி  உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்து விஜயன் சரோஜினியை  தாக்கி தகராறு  செய்தார். அக்கம் பக்கத்தினரும் வழக்கம் போல் உள்ள தகராறு என  எண்ணிக்கொண்டனர்.

பின்னர் போதையில் தூங்க சென்ற விஜயன், நள்ளிரவில்  மீண்டும் எழுந்து கட்டிலில் தூங்கி கொண்டிருந்த சரோஜினியை எழுப்பி ரூ.10  ஆயிரம் கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது அவர் பணம் தன்னிடம் இல்லை என  கூறி விட்டு கட்டிலில் படுத்தார். அப்போது அங்கிருந்த ஒரு மர கட்டையால்  சரோஜினியின் தலையில், விஜயன் ஓங்கி அடித்துள்ளார். இதில் தலையில் பலத்த  காயம் ஏற்பட்டு, சரோஜினி சம்பவ இடத்திலேயே  இறந்தார்.

நேற்று காலை  வெகு நேரமாக சரோஜினி எழுந்து வராததையடுத்து , அக்கம் பக்கத்தினர் சென்று  பார்த்தனர். அப்போது கட்டிலில் ரத்த வெள்ளத்தில் சரோஜினி இறந்து கிடந்தார்.  ெபாது மக்கள் திரண்டதை தொடர்ந்து, வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த  விஜயன் தப்பி ஓட முயன்றார். அவரை ெபாது மக்கள் பைக்கில் விரட்டி சென்று  மடக்கி பிடித்தனர்.

பின்னர் திருவட்டார் காவல் நிலையத்துக்கு தகவல்  தெரிவித்தனர். தக்கலை டி.எஸ்.பி. கணேசன், இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்காதர்  மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். சரோஜினி உடலை பிரேத  பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். பிடித்து வைத்து இருந்த விஜயனை பொதுமக்கள் போலீசிடம் ஒப்படைத்தனர்.  இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விஜயனை கைது  செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 தாயை மகனே அடித்து கொலை செய்த  சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



Tags : Thiruvattar , Kulasekara: Police have arrested a worker who had an altercation with his mother near Thiruvattar and beat him to death with a stick
× RELATED திருவட்டார் அருகே கல் ஏற்றி வந்த டெம்போ பறிமுதல்