மதுரை:மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, கடந்த 17ம் தேதி, பணிமாற்றம் செய்யப்பட்டு, தஞ்சாவூர், குருங்குளம் தேசிய சர்க்கரை ஆலையின் தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். பணியிட மாற்ற அறிவிப்பு வெளியான அன்றைய தினம் 50க்கு மேற்பட்டவர்களுக்கு வருவாய்த்துறையில் முதுநிலை வருவாய் அலுவலர் பணிமாற்றம், பதவி உயர்வு வழங்கி செந்தில்குமாரி அதிரடியாக உத்தரவிட்டார். இதனை கேள்விப்பட்ட கலெக்டர் அனீஷ்சேகர், ‘‘நீங்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட பின் எப்படி ஊழியர்களுக்கு பணிமாற்றம், பதவி உயர்வுக்கான உத்தரவு பிறப்பிக்க முடியும். இந்த உத்தரவை ஏற்க முடியாது’’ என டிஆர்ஓவிடம் தனது அதிருப்தியை தெரிவித்தார். இதனால் வேறுவழியின்றி, முதல் நாள் போட்ட தனது உத்தரவை மறுநாளே ரத்து செய்தார்.