ஆனைமலை: பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைகளில் மழைப்பொழிவு இல்லாததால், தண்ணீர் வரத்து குறைந்து ஆழியார் அணை குளம் போல் காட்சியளிக்கிறது.பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி அடிவாரத்தில் அமைந்துள்ள ஆழியாறு அணை 120 அடி உயரம் கொண்டது. ஆழியார் அணை மூலம் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த அணை நீர் பொள்ளாச்சி மக்களின் குடி நீர் ஆதாரமாகவும் உள்ளது. கடந்த மூன்று மாதங்களாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் மழைப்பொழிவு இல்லாத காரணத்தினால், அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்து வந்தது.
கடந்த மார்ச் 1ம் தேதி நிலவரப்படி, ஆழியாறு அணையின் நீர்மட்டம் 83.95 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 713 கன அடியாகவும், அணையில் இருந்து வினாடிக்கு 772 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில், 18 நாட்களில் அணையின் நீர்மட்டம் 9 அடி வரை குறைந்து, நேற்றைய நிலவரப்படி 120 அடி உயரம் கொண்ட ஆழியாறு ஆணை 75.10 அடியாக இருந்தது.அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 508 கன அடியாகவும், அணையில் இருந்து வினாடிக்கு 591 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஆழியாறு அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கலக்கம் அடைந்து வருகின்றனர். இதேபோல, பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் முக்கிய அணையான 72 அடி உயரம் கொண்ட பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 62.81 அடியாக இருந்தது. இதேபோல, 160 அடி உயரம் கொண்ட சோலையார் அணையின் நீர்மட்டம் 24.48 அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.