சென்னை: செங்கல்பட்டு அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பாலாற்றின் குறுக்கே இரண்டு மேம்பாலங்கள் உள்ளது. இந்த மேம்பாலங்கள் கடந்த ஆண்டு பெய்த மழையின் காரணமாக கடுமையான சேதங்களை சந்தித்தது. மேம்பாலத்தை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு கடந்த பிப்ரவரி 7ம் தேதி முதல் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், இரண்டு பாலங்களில் ஒரு பாலம் சீரமைக்கப்பட்டு, அதில் சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக ஒருவழி பாதையாக போக்குவரத்து செயல்பட்டு வந்தது.
இந்த பணிகளை சென்ற வாரம் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்து பால சீரமைப்பு பணிகள் முடிவடைந்து 17ம் தேதி வாகன போக்குவரத்து அனுமதிக்கப்படும் என்று தெரிவித்தார். அதன்படி, இரண்டாவது பாலத்தில் சீரமைப்பு பணிகள் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதனால், சுமார் 38 நாட்களுக்கு பிறகு, இப்பாலம் வழியாக வாகனங்கள் இயக்கப்படுகிறது. நேற்று மாலை செங்கல்பட்டு மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சோரா போக்குவரத்தை துவக்கி வைத்தார். மேம்பாலத்தின் வழியாக வாகனங்கள் செல்லும் போது பொதுமக்கள் பெருமகிழ்ச்சியுடன் கைதட்டி ஆரவாரத்துடன் சென்றனர்.