துறையூர் : துறையூர் அருகே கண்ணனூர்பாளையம் பகுதிக்கு 3 மாதமாக காவிரி குடிநீர் முறையாக வழங்காததை கண்டித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
துறையூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கண்ணனூர் பாளையம் பகுதிக்கு கடந்த 3 மாதங்களாக காவிரி நீர் சரிவர வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் புகார் தெரிவித்தனர்.
ஊராட்சி தலைவர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பலமுறை வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படததால் ஆத்திரமடைந்த 100 பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் துறையூரில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் கண்ணனூர்பாளையம் பிரிவு ரோட்டில் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து துறையூரில் இருந்து நாமக்கல் மற்றும் முசிறி செல்லும் சாலையில் போக்குவரத்து தடைபட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தா.பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் பொதுமக்களின் கோரிக்கை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.