திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. திருவிழாவை முன்னிட்டு கடந்த சில தினங்களாக சபரிமலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். திருவிழாவின் 9ம் நாளான நேற்று இரவு சரங்குத்தியில் பள்ளிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில், கடைசி நாளான இன்று பம்பையில் பிரசித்தி பெற்ற ஆறாட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 11.30 மணி அளவில் பம்பையில் இதற்காக அமைக்கப்பட்டுள்ள குளத்தில் ஆறாட்டு நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து மாலை கொடி இறக்கப்படுகிறது. இதற்கிடையே பங்குனி மாத பூஜைகள் 19ம் தேதி வரை நடைபெறும். அன்று இரவு சபரிமலை கோயில் நடை சாத்தப்படும்.