காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 8ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இன்று 13ம் தேதி 63 நாயன்மார்களும் திருக்கோலத்துடன் கண்ணாடி விமானத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள், நாயன்மார்களை வழிபட்டனர். நேற்றிரவு ஏகாம்பரநாதர், ஏலவார் குழலி அம்மன் அலங்கரித்த வெள்ளித் தேரில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இன்று 14ம்தேதி காலை ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி அம்மன் அலங்கரித்த மரத் தேரில் வாணவேடிக்கை முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.
மரத்தேர் உற்சவத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு வழிநெடுக அன்னதானம், நீர், மோர் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. முன்னதாக மரத்தேரை முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் ஆகியோர் வடம் பிடித்து இழுத்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் மற்றும் விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.