வேப்பூர் : கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே சாலையின் நடுவே உள்ள செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த தண்ணீர் லாரி மீது கனரக லாரி மோதியதில் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே பலியானார். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வடுகப் பட்டி பகுதியை சேர்ந்த சின்னசாமி மகன் மணிமாறன் (40). லாரி ஓட்டுனரான இவர் கனரக லாரியில் நேற்று மானாமதுரையிலிருந்து மினி மிக்ஸர் மிஷினை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். இவரோடு கமுதி பகுதியை சேர்ந்த தங்கபாண்டியன் மகன் அருண்பாண்டியன் லாரியில் உடன் வந்தார்.
நேற்று மதியம் 12 மணியளவில் கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்டுரோடு அடுத்த சேப்பாக்கம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரி சென்று கொண்டிருந்த போது அதே திசையில் சென்டர் மீடியனில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த தண்ணீர் லாரியின் பின்னால் மணிமாறன் ஓட்டி வந்த கனரக லாரி எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் மணிமாறன் ஓட்டி வந்த லாரியின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. பலத்த காயமடைந்து இடிபாடுகளில் சிக்கிய ஓட்டுனர் மணிமாறன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அருகில் உட்கார்ந்து இருந்த அருண்பாண்டியன் (24) காயமின்றி உயிர் தப்பினார்.
வேப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சண்முகம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு லாரியின் முன்பகுதியை மிஷின் மூலம் அறுத்தெடுத்து டிரைவர் மணிமாறன் உடலை வெளியே எடுத்தனர் விபத்து குறித்து தகவலறிந்த வேப்பூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் வேப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்து போலீசார் நெரிசலை சரி செய்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.