×

தென்காசி அருகே கடிதம் எழுதிவைத்துவிட்டு கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை: பேராசிரியர்கள் இருவர் கைது

புளியங்குடி: பேராசிரியர்கள் திட்டியதால் சாவதாக கடிதம் எழுதி வைத்து விட்டு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம், புளியங்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டம் புளியங்குடி சிந்தாமணி மேலரதவீதியை சேர்ந்தவர் கணேசன்- மாடத்தி தம்பதியின் மகள் இந்து பிரியா(18). கணவன் இறந்ததால், மாடத்தி கூலி வேலை செய்து மகளை, மனோ உறுப்புக் கல்லூரியில் பி.காம் படிக்க வைத்துள்ளார். கடந்த 8ம் தேதி மகளிர் தினத்தன்று இந்துபிரியா, கல்லூரிக்கு செல்போன் கொண்டு வந்ததாக கூறி பேராசிரியர்கள் இருவர் மன்னிப்பு கடிதம் கேட்டதாக கூறப்படுகிறது. மேலும் சக மாணவர்கள் முன்னிலையில் இந்துபிரியாவை கடுமையாக திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த அவர், நேற்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த புளியங்குடி போலீசார் வந்து விசாரணை நடத்தினர். வீட்டில் மாணவி எழுதிய கடிதம் சிக்கியது. அதில், பேராசிரியர் முத்துமணி, பேராசிரியை வளர்மதி ஆகியோர்தான் தன் சாவுக்கு காரணம் என எழுதியுள்ளார். இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே மாணவி தற்கொலை விவகாரம் குறித்து அறிந்த புளியங்குடி, சங்கரன்கோவில் மனோ கல்லூரி மாணவர்கள் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். அவர்களுடன் மார்க்சிஸ்ட் நகர செயலாளர் மணிகண்டன், மாவட்ட மாணவரணி தலைவர் சத்யா மற்றும் இந்துபிரியாவின் உறவினர்களும் திரண்டனர்.

மாணவி மரணத்திற்கு காரணமானவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சதன் திருமலைக்குமார் எம்எல்ஏ, டிஎஸ்பி கணேஷ், கடையநல்லூர் தாசில்தார் அரவிந்தன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் நிவாரணத்தொகை பெற்று தரப்படும் என்று உறுதி அளித்தனர். ஆனாலும் எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க வலியுறுத்தினர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : Tenkasi , College student hangs himself after writing letter near Tenkasi: Two professors arrested
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...