ஆவடி: ஆவடி அடுத்த காட்டூர் தொழிற்பேட்டையில் ஒரு குடோனில் செம்மரக்கட்டைகள் பதுக்கிவைத்திருப்பதாக சென்னை நுண்ணறிவு மற்றும் புலனாய்வு வனத்துறை பிரிவுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி உதவி வனப்பாதுகாவலர் மகேந்திரன், வனச்சரக அலுவலர் ராஜேஷ் ஆகியோர் தலைமையில் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர், அங்கிருந்த பொதுமக்கள் முன்னிலையில் வனத்துறையினர் குடோனை உடைத்து சோதனை செய்தனர். அப்போது, அங்கு செம்மரக்கட்டைகள் துண்டு, துண்டாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, வனத்துறையினர் அங்கிருந்த சுமார் 2 டன் எடையுள்ள செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ₹2 கோடி. வனத்துறை அதிகாரிகள் செம்மரக்கட்டைகளை கும்மிடிப்பூண்டி வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும், இதுதொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிவுசெய்து செம்மரக்கட்டைகளை கடத்தி பதுக்கிவைத்த குடோன் உரிமையாளர் மற்றும் உடந்தையாக இருக்கும் நபர்களை தேடுகின்றனர். கடந்த பிப்.9ம் தேதி அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் குடோனில் ஒரு டன் எடையுள்ள செம்மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.