திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் ரூ.1 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது. திருத்தணி முருகன் கோயிலுக்கு தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள், நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். பின்னர் கோயிலில் உள்ள உண்டியலில் பணம், தங்கம், வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்நிலையில், கடந்த 31 நாட்களுக்கு பிறகு கோயில் உண்டியல் பணம் நேற்று முன்தினம் எண்ணப்பட்டது.
தக்கார் லட்சுமணன், இணை ஆணையர் பரஞ்ஜோதி முன்னிலையில், நிர்வாகிகள் தலைமையில் பக்தர்கள் மற்றும் ஊழியர்கள் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.1 கோடியே 12 லட்சத்து 36 ஆயிரத்து 265 இருந்தது. இதுதவிர 1,035 கிராம் தங்கம், 13,200 கிராம் வெள்ளியும் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர். இவை திருத்தணியில் உள்ள ஒரு வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது.