திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் உண்டியலில் ஒரு கோடி ரூபாய் காணிக்கையை செலுத்தியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள முருகன் கோயிலுக்கு தமிழகம் மற்றும் பல மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்ற கோயில் உண்டியலில் பணம், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 22 நாட்களுக்கு பிறகு உண்டியல் பணம் நேற்று எண்ணப்பட்டது. தக்கார் லட்சுமணன், இணை ஆணையர் பரஞ்ஜோதி முன்னிலையில், கோயில் ஊழியர்கள், பக்தர்கள் பணத்தை எண்ணும் பணியில்ஈடுபட்டனர். இதில், உண்டியலில் ஒரு கோடியே 12 லட்சத்து 28 ஆயிரத்து 857 ரூபாய் இருந்தது. இதுதவிர 645 கிராம் தங்கம் மற்றும் 6950 கிராம் வெள்ளி ஆகியவற்றையும் பக்தர்கள் செலுத்தியிருந்தனர். இந்த பணத்தை திருத்தணியில் உள்ள வங்கியில் டெபாசிட் செய்தனர்.