×

முல்லை பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்பு பணிகளுக்கு இடையூறு: கேரள அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் மத்திய நீர்வள ஆணையத்தின் செயற் பொறியாளர் தலைமையில் ஐந்து பேர் கொண்ட துணைக் குழு முல்லைப் பெரியாறு பகுதியினை பார்வையிட்டது. இந்தத் துணைக் குழுவில் தமிழ்நாடு சார்பில் இரண்டு பொறியாளர்களும், கேரளா சார்பில் இரண்டு பொறியாளர்களும் இடம் பெற்றுள்ளனர். அணையை பார்வையிட்ட பிறகு திறனாய்வு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி அணையைப் பராமரிக்கும் பணிகளை தமிழ்நாடு மேற்கொள்ள மேற்பார்வைக் குழு அனுமதி அளித்துள்ளதை சுட்டிக்காட்டிய தமிழ்நாட்டுப் பொறியாளர்கள் அதற்குத் தேவையான கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்ல முயன்றபோது அதனை கேரள அரசின் வனத் துறை மற்றும் பொதுப் பணித் துறை அதிகாரிகள் தடுத்துள்ளனர்.

பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள விடாமல் தடுப்பது என்பது உச்ச நீதிமன்ற அவமதிப்பாகும் என்று தெரிவித்துவிட்டு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தது. வெளிநடப்பு செய்த ஐந்தே நிமிடங்களில் துணைக் குழுக் கூட்டம் முடிந்து விட்டது. துணைக் குழுவின் தலைவராக இருக்கக்கூடிய மத்திய நீர்வள ஆணையத்தின் செயற் பொறியாளர் உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை சுட்டிக்காட்டி கேரள அரசின் அதிகாரிகளிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி, சட்ட நிலைப்பாட்டினை வலியுறுத்தி அணையின் பராமரிப்புப் பணிகளை தமிழகம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை.

பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள விடாமல் கேரள அரசு தொடர்ந்து தடுத்துக் கொண்டே இருப்பது என்பது தமிழ்நாட்டின் உரிமையைப் பறிக்கும் செயலாகும். தமிழ்நாட்டின் உரிமையில் தலையிடுகின்ற வகையில் கேரளா ஈடுபட்டு வருகின்ற நிலையில், பராமரிப்புப் பணிகளையும் தொடர்ந்து மேற்கொள்ளவிடாமல் இடையூறு விளைவித்து வருகிறது. கேரள அரசின் இந்தச் செயலுக்கு  கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : Mulla Periyari Dam ,OBS ,Kerala government , Mullaperiyaru, dam, maintenance work, obstruction, OBS
× RELATED சிறுவாணியில் அணை கட்ட அனுமதி கோரி...