×

அதிவேக உயிர்காக்கும் நடவடிக்கையாக காவேரி மருத்துவமனையில் இதய அதிர்ச்சி சிகிச்சை குழு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

சென்னை: அதிவேக உயிர்காக்கும் நடவடிக்கையாக இந்தியாவின் முதல் இதய அதிர்ச்சி சிகிச்சை குழுவை காவேரி மருத்துவமனை அறிமுகம் செய்துள்ளது. இதனை தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தீவிரமான சீர்பிறழ்வுகளை தொடர்ந்து இதயத்தம்பம், இதய செயலிழப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான நிலைகளிலுள்ள நோயாளிகளுக்கு விரைவான, ஒருங்கிணைக்கப்பட்ட சிகிச்சையை வழங்குவதற்கென காவேரி மருத்துவமனையில் இதய அதிர்ச்சி சிகிச்சை குழு உருவாக்கப்பட்டிருக்கிறது.

சிகிச்சை வழங்குவதில் ஏற்படும் தாமதம் பல நேரங்களில் உயிரிழப்பிற்கு வழிவகுக்கக்கூடும் என்பதால், இது நிகழாமல் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஒரு பிரத்யேக ஹெல்ப்லைன் வழியாக இதய அதிர்ச்சி சிகிச்சை குழுவின் சேவையை பெற முடியும். நோயாளிகள், நோயாளிகளை கவனித்துக் கொள்பவர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மருத்துவமனையோடு தொடர்புக்கான ஒற்றை முனையாக இந்த ஹெல்ப்லைன் செயல்படும். பல்வேறு துறைகளை தொடர்பு கொள்வதற்கான அவசியத்தை நீக்குவதன் வழியாக உயிருக்கு ஆபத்தான முக்கியமான தருணங்களில் தாமதமின்றி உயிர் காக்கும் இடையீட்டு சிகிச்சைகள் உடனடியாக வழங்கப்படுவதை இக்குழு உறுதி செய்யும்.

இதய அதிர்ச்சி சிகிச்சை குழுவில் இதய சிகிச்சை மருத்துவர்கள், இதய அறுவைசிகிச்சை நிபுணர்கள், மயக்கவியல் வல்லுநர்கள் மற்றும் தீவிர சிகிச்சை மருத்துவர்கள் உட்பட பல்வேறு துறைகள் மற்றும் பிரிவுகளைச் சேர்ந்த நிபுணர்கள் இடம் பெறுகின்றனர். உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளில் சாத்தியமுள்ள மிகச்சிறந்த சிகிச்சையை உடனடியாக வழங்குவதற்கு இவர்கள் ஒருங்கிணைந்து ஒத்துழைப்புடன் இயங்குகின்றனர். சிகிச்சையளிக்கப்படாத இதய அதிர்ச்சி நிகழ்வானது உயிரிழப்பிற்கான இடர்வாய்ப்பு கணிசமாக அதிகரிக்கிறது என்பதால் இத்தகைய ஒருங்கிணைக்கப்பட்ட அணுகுமுறை இன்றியமையாததாகும்.

இதய அதிர்ச்சி சிகிச்சை குழு தொடக்க விழா சென்னை வடபழனிடயில் உள்ள காவேரி மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பங்கேற்று சேவையை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி இதய பராமரிப்பு மைய இயக்குநர் தணிகாசலம் மற்றும் காவேரி மருத்துவமனைகள் குழும செயலாக்க இயக்குநர் அரவிந்தன் செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

The post அதிவேக உயிர்காக்கும் நடவடிக்கையாக காவேரி மருத்துவமனையில் இதய அதிர்ச்சி சிகிச்சை குழு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Cardiac Trauma Treatment Unit ,Kaveri Hospital ,Minister ,M. Subramanian ,CHENNAI ,India ,Tamil Nadu ,Medical ,Cardiac Trauma Treatment Team ,
× RELATED மாதவரத்தில் கனமழை காரணமாக வீடுகளை...