கீவ் : உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை கொல்ல தலைநகர் கீவ்வில் ரஷிய கூலிப்படையினர் 400 பேர் முகாமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த 6 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.இந்த நிலையில், தன்னை கொலை செய்வது மூலம் உக்ரைனை வீழ்த்த ரஷியா திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறி வருகிறார். இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொலை செய்ய தலைநகர் கீவ்வில் ரஷிய கூலிப்படையினர் 400 பேர் முகாமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நெருங்கிய கூட்டாளிகளால் இயக்கப்படும் போராளிகள் குழுவினர் பெயர் வாக்னர். ஆப்ரிக்காவில் இருந்து கூலிப்படையினரை வரவழைத்து அவர்கள் மூலம் ஜெலன்ஸ்கியை கொலை செய்வதற்கான திட்டங்களை வாக்னர் குழு தீட்டிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 வாரங்களுக்கு முன்பே அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கீவ் நகருக்குள் நுழைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர்களது சதி திட்டம் பற்றிய தகவல் கடந்த சனிக்கிழமை உக்ரேனிய அரசாங்கத்தை அடைந்தது. இதையடுத்து சில மணி நேரத்தில் 36 மணி கடினமான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிகிறது.