நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகம் சீகூர், சிங்காரா வனப்பகுதிகளில் வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால் காமராஜர் சாகர் அணையிலிருந்து தண்ணீரை திறக்க வேண்டும் என சுற்றுசூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முதுமலை புலிகள் காப்பத்தில் வறட்சி தொடங்கியதை அடுத்து சீகூர், சிங்காரா வனப்பகுதிகளில் விலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் கடும் உறைபனி பொழிவு இருந்ததால் வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டது. பகல் நேரங்களில் கடும் வெயிலின் தாக்கம் இருப்பதால் சீகூர், சிங்காரா வனப்பகுதிகளில் நீர், நிலைகள் வேகமாக வறண்டு வருகின்றன.
வனப்பகுதிகளில் கட்டப்பட்டுள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணிகளும் தொடங்கப்படாமல் உள்ளது. எனவே, காமராஜர் சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுசூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே வனப்பகுதி குளம், குட்டைகள் தண்ணீர் இன்றி காட்சி தரும் நிலையில் சீகூர் மற்றும் ஆனைக்கட்டி ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. எனவே, வனப்பகுதியில் கட்டப்பட்டுள்ள தொட்டிகளில் தண்ணீர் ஊற்ற நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் வனவிலங்குகள் குடிநீரை தேடி அலைந்து திரியும் நிலை ஏற்பட்டுள்ளது.