திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் ரெங்கநாதபுரம் தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். விவசாயியான இவருக்கு செண்பகத்தோப்பு சாலையில் தோட்டம் உள்ளது. இதில் வாழை மரங்கள் மற்றும் சுமார் 1500க்கும் மேற்பட்ட வாழை கன்றுகள் சாகுபடி செய்துள்ளார்.நேற்று முன்தினம் இரவு முத்துக்கிருஷ்ணன் தோட்டத்தில் புகுந்த மான் கூட்டம், பெரிய வாழை மரங்களையும், 500க்கும் மேற்பட்ட வாழைக்கன்றுகளையும் கடித்து குதறி சேதப்படுத்தியுள்ளன.
நேற்று காலை தோட்டத்திற்கு சென்றபோது முத்துகிருஷ்ணன் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் கொடுத்த தகவலின் பேரில், வனத்துறை அதிகாரி பாரதி மற்றும் வனத்துறையினர் தோட்டத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.விவசாயி முத்துகிருஷ்ணன் கூறுகையில், ‘மிகவும் சிரமப்பட்டு விவசாயம் செய்து வருகிறோம். தற்போது மான்கள் கூட்டம், கூட்டமாக வந்து வாழைகளை நாசப்படுத்தி வருகின்றன. எனவே, அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’ என்றார்.