சென்னை: இணையதள தொலைக்காட்சிக்கு மனிதநேயம், மதநல்லிணக்கம் குறித்து பேட்டியளித்த பள்ளி மாணவன் ஏ.அப்துல்கலாம் கடந்த 24ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போது, மாணவனின் பெற்றோர் குடியிருக்க வீடு ஒன்று வேண்டும் என்றும் முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்தனர். இந்நிலையில், தலைமை செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், பள்ளி மாணவன் ஏ.அப்துல்கலாம் பெற்றோருக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சென்னை, கலைஞர் கருணாநிதி நகர், சிவலிங்கபுரம் திட்டப் பகுதியில் குடியிருப்பு ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையை வழங்கினார். ஒதுக்கீட்டு ஆணையை பெற்றுக்கொண்ட மாணவன் ஏ.அப்துல்கலாமின் பெற்றோர் முதல்வருக்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.