திருவொற்றியூர்: சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்தில் 14 வார்டுகளில் 12 வார்டுகளை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. இதனால், மண்டலக் குழு தலைவர் பதவி யாருக்கு என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலத்தில் உள்ள 14 வார்டுகளில் 10 வார்டுகளில் திமுகவும், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் தலா ஒரு வார்டுகளிலும் வெற்றி பெற்றன. திமுக கூட்டணி மொத்தமாக 12 வார்டுகளை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் திருவொற்றியூர் மண்டலக்குழு தலைவர் பதவி யாருக்கு கிடைக்கும் என்பது தொடர்பாக, திமுக கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. மண்டலக்குழு தலைவர் பதவி திமுகவிற்கு ஒதுக்கப்பட்டால் திமுக சார்பில் வெற்றி பெற்றவர்களில் 3வது வார்டு தம்பியா என்ற தமிழரசன், 5வது வார்டு கே.பி.சொக்கலிங்கம், 10வது வார்டு தி.மு.தனியரசு, 12வது வார்டு கவி கணேசன் ஆகியோரில் ஒருவருக்கு கிடைக்கலாம் என்று பரவலாக பேசப்படுகிறது.