சென்னை: தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்துள்ளது. நாடாளுமன்ற, சட்டமன்ற, ஊரக உள்ளாட்சித் தேர்தல்களை தொடர்ந்து தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் கூட்டணி கட்சிகளும் அமோக வெற்றியை தனதாக்கியிருக்கிறது. இப்படி இருக்கையில், தமிழ்நாட்டின் எதிர்க்கட்சிகளாக இருக்கக் கூடிய அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க உள்ளிட்டவை அவரவர்களின் சொந்த தொகுதியிலேயே தோல்வியை சந்தித்துள்ளது. தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக அங்கொன்றும், இங்கொன்றுமாக வென்றுள்ளது.
அதனை பாஜக நிர்வாகிகள், ‘இந்த வெற்றி பாஜக பெற்றுள்ள வளர்ச்சியின் அடையாளம். தமிழகத்தின் 3வது பெரிய கட்சி பாஜக’ என்று கூறிக் கொண்டு இருக்கின்றனர். இதேபோல மற்றொரு தேசிய கட்சியான காங்கிரஸ் சட்டமன்றத்தில் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 18 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியை நிரூபித்தது. சட்டமன்ற தேர்தல் கிடைத்த வெற்றியை தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்டது. இதில் மிகப்பெரிய அளவிலான வெற்றியை காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது.
73 மாநகராட்சி வார்டு உறுப்பினர்களையும், 151 நகராட்சி உறுப்பினர்களையும், 368 பேரூராட்சி வார்டுகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி 4.27 சதவிகித வாக்குகளை பெற்றிருந்தது. பாரதிய ஜனதா கட்சி பொருத்தவரை 2.62 சதவிகித வாக்குகளை பெற்றிருந்தது. மாநகராட்சி யை பொருத்தவரை காங்கிரஸ் கட்சி 5.31 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சி 1.60 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளது. நகராட்சி தேர்தலை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி 3.93 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளது.
பாரதிய ஜனதா கட்சி 1.46 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளது. பேரூராட்சி வார்டு உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சி 4.83 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சி 3.02 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளது. எனவே பாரதிய ஜனதா கட்சி தான் தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்று கூறிவரும் நிலையில் தற்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வாக்கு சதவிகித அடிப்படையில் தமிழகத்தில் மூன்றாவது கட்சியாக காங்கிரஸ் கட்சி உள்ளது.