நெல்லை : நெல்லை மாநகராட்சி, சங்கர்நகர், நாரணம்மாள்புரம் பேரூராட்சிகளில் திமுக கைப்பற்றியதை தொடர்ந்து தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் மேளதாளங்கள் முழங்க உற்சாகமாக கொண்டாடினர்.தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு பிப் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைதொடர்ந்து ஜன 28ம் தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்கி பிப். 4ம் தேதி முடிவடைந்தது. பிப். 5ம் தேதி மனுக்கள் பரிசீலனை நடந்தது. பிப் 7ம் தேதி மனுக்கள் திரும்பபெறுதலும் நடந்தது.
இதைதொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகளுக்கும் கடந்த 19ம் தேர்தல் நடந்தது. இதையடுத்து நெல்லை மாநகராட்சி, சங்கர்நகர், நாரணம்மாள் பேரூராட்சிகளில் பதிவான வாக்குப்பெட்டிகள் நெல்லை அரசு பொறியில் கல்லூரில் ஸ்ட்ராங் ரூமில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இதையடுத்து நெல்லை மாநகராட்சி, சங்கர்நகர், நாரணம்மாள்புரம் பேரூராட்சி வாக்குகள் நேற்று காலையில் எண்ணப்பட்டன. நெல்லை அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையம் அமைந்துள்ள திருவனந்தபுரம் சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டன.
வாகனங்கள் மற்றுபாதையில் திருப்பிவிடப்பட்டன. நெல்லையில் இருந்து நாகர்கோவில் செல்லும் வாகனங்கள் மேலப்பாளையம் வழியாக சந்தை ரவுண்டானா வந்து புதிய பஸ்நிலையம் செல்லும் வகையில் வாகனங்கள் இயக்கப்பட்டன. காலையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் திருவனந்தபுரம் சாலையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
வாக்கு எண்ணும் மையத்திலிருந்து நெல்லை மாநகராட்சி, சங்கர்நகர், நாரணம்மாள்புரம் பேரூராட்சிகள் திமுக வசமானதை தொடர்ந்து திருவனந்தபுரம் சாலையில் நின்ற திமுக தொண்டர்கள் உற்சாகத்தில் விசில் அடித்து அரவாரம் செய்தனர். அதிமுகவினர் உற்சாகம் இழந்து காணப்பட்டனர்.
இதைதொடர்ந்து வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து 200மீ தூரத்தில் தொண்டர்கள் ஆரவாரத்தில் துள்ளிகுத்தினர். வேட்பாளர்களை ேதாளில் சுமந்தும், பட்டாசு வெடித்தும், ஆள் உயர பூமாலைகள் அணிவித்தும், மேளதாளங்கள் முழங்க வாகனங்களில் அழைத்து சென்றனர்.
இதனால் நெல்லை - திருவனந்தபுரம் சாலையில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையம் பகுதியில் ஏராளமான தொண்டர்கள் கூடி வேட்பாளர்களை ஊர்வலமாக அழைத்து சென்றதால் பின்தொடர்ந்து வரும் வாகனங்கள் நெருக்கடியில் உற்சாக பயணத்தை தொடர்ந்தனர்.