மதுராந்தகம்: மதுராந்தகம் நகராட்சியின் 24 வார்டுகளில் போட்டியிட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சியினர், 19 வார்டுகளில் அமோகமாக வெற்றி பெற்றனர். இதையொட்டி, நகர திமுக அலுவலகத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். மதுராந்தகம் நகராட்சி 24 வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், 19 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றனர். இதை உற்சாகமாக கொண்டாடும் வகையில் மதுராந்தகம் பஸ் நிலையம் அருகில் உள்ள நகர திமுக அலுவலகத்தில், அக்கட்சியினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இதில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, எம்பி செல்வம், திமுக சார்பில் 2வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நகர செயலாளர் கே.குமார், முன்னாள் நகர மன்ற தலைவரும் 17வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மலர்விழி குமார் ஆகியோர் ஊர்வலமாக சென்று, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினர். இதில், அச்சிறுப்பாக்கம் ஒன்றியக்குழு பெருந்தலைவர் கண்ணன், மதுராந்தகம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் பொன்.சிவகுமார், முன்னாள் நகர செயலாளர் பிரேம்சந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.