பொன்னேரி: மீஞ்சூர் பேரூராட்சியில் அதிமுக வேட்பாளர் மீது அக்கட்சியினரே தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு துவங்கியது. இந்நிலையில், 2வது வார்டில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் சுயேச்சை வேட்பாளர் சின்னத்தில் விளக்கு எரியவில்லை என்று கேட்ட அதிமுக வேட்பாளர் முகமது அலியை அவரை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிடும் முன்னாள் அதிமுக கிளை செயலாளர் அஸ்கர் அலி சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வேட்பாளர் போலீசில் புகார் தெரிவித்ததுடன் சிறிதுநேரம் போராட்டத்தில் ஈடுபட்டார். போலீசார் அங்கு வந்து காயம் அடைந்த அதிமுக வேட்பாளர் முகமது அலியை உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மீஞ்சூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின்போது அதிமுக வேட்பாளர் மீது அக்கட்சியினரே தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.