×

'வீடுகளில் பாதுகாப்பு இல்லாதவர்களே ஹிஜாப் அணிய வேண்டும்': பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்குர் சர்ச்சை பேச்சு

போபால்: வீடுகளில் பாதுகாப்பு இல்லாதவர்களே ஹிஜாப் அணிய வேண்டும் என பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்குர் தெரிவித்துள்ள கருத்து சர்சையை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்களில் ஹிஜாப், காவி துண்டு உள்ளிட்ட மத ரீதியான உடைகளை அணியக்கூடாது என அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நேற்று கர்நாடகாவில் போலீஸ் பாதுகாப்புடன் க‌ல்லூரிகள் திறக்கப்பட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவுப்படி ஹிஜாப்புக்கு தடை விதித்ததால் மாணவிகள் வகுப்புக்களை புறக்கணித்தனர்.

இந்நிலையில், கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. மேலும், மத்தியப்பிரதேச தலைநகர் போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்குர் பேச்சு சர்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரக்யா தாக்குர் கூறும் கருத்துகள் சர்ச்சைக்குள்ளாவது புதிதல்ல. எனினும், கர்நாடகாவில் ஹிஜாப் சர்ச்சை ஓயாத நிலையில் இவரது கருத்து சலசலப்பைக் கூட்டியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் கோயில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பிரக்யா தாகூர் பங்கேற்றிருந்தார். அப்போது அவர், ஹிஜாபை பொது இடங்களில் அணிய வேண்டாம். வீட்டில் பாதுகாப்பாக உணராதவர்களே ஹிஜாப் அணிகிறார்கள். உங்களுக்கு மதரஸாக்கள் உள்ளன. அங்கு நீங்கள் ஹிஜாப் அணிந்து செல்லுங்கள். எங்களுக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் பொது இடங்களில் இந்து சமூகம் உள்ளது. அங்கே நீங்கள் ஹிஜாப் அணியத் தேவையில்லை. இந்துக்கள் பெண்களை வணங்குகின்றனர்.

இந்துக்கள் பெண்களை மோசமான பார்வையில் பார்ப்பதில்லை. அதனால் நீங்கள் உங்களை ஹிஜாப் என்ற திரைபோட்டு மறைக்கத் தேவையில்லை. பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதை பொறுத்துக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். பிரக்யா தாக்குர் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது பேச்சு அடங்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி விவாதப் பொருளாகியுள்ளது.. முன்னதாக, மாணவ, மாணவிகளின் சீருடையை தீர்மானிக்கும் அதிகாரம் பள்ளி, கல்லூரிகளுக்‍கு உண்டு என்றும் ஹிஜாப்பிற்காக போராடும் மாணவிகள் தங்களது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் கேரள ஆளுநர் ஆரிஃப் முகமதுகான் தெரிவித்திருந்தார்.  


Tags : Prakya Singh Dakur , Home, Security, Hijab, BJP, MP, Pragya Singh Thakur, Speech
× RELATED அரசியல் தலைவர்களின் பெயர்...