×

போச்சம்பள்ளி அருகே பயங்கரம் மிளகாய் பொடி தூவி ராணுவ வீரரை சரமாரி வெட்டிக்கொன்ற மனைவி: பிரிந்து சென்றவரை அழைத்தபோது உறவினர்களுடன் சேர்ந்து கொடூரம்

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அருகே குடும்பம் நடத்த வருமாறு பிரிந்து சென்ற மனைவியை அழைக்கச் சென்றபோது ஏற்பட்ட தகராறில், கண்ணில் மிளகாய் பொடி தூவி ராணுவ வீரர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது மனைவி மற்றும் உறவினர்களை போலீசார் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூர் இந்திரா நகரை சேர்ந்தவர் நரேஷ்குமார் (42). இவர் மேற்கு வங்கத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சசிகலா (38). இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர்.

இந்நிலையில் கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் உறவினர்கள் அவர்களை சமாதானப்படுத்தி வந்தனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் இருவரும் பிரிந்துவிட்டனர். மகன், மகள்கள் சசிகலாவுடன் உள்ளனர். இதனிடையே ராணுவ பணிக்கு சென்றிருந்த நரேஷ்குமார் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்தார். கடந்த 13ம் தேதி மாலை மதுபோதையில் இருந்த அவர் அதே பகுதியில் தனியாக வசித்து வரும் சசிகலாவின் வீட்டுக்கு சென்றார். அவரை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார்.

அதற்கு சசிகலா மறுப்பு தெரிவித்ததால், வாய்த்தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் கைகலப்பு உருவானது. இதில், ஆத்திரமடைந்த சசிகலா மிளகாய் பொடியை எடுத்து நரேஷ்குமாரின் கண்ணில் தூவி, அங்கிருந்த கட்டையால் அவரை சரமாரியாக தாக்கினார். அப்போது, அங்கு வந்த சசிகலாவின் உறவினர்களும் நரேஷ்குமாரை தாக்கினர். மேலும், ஆத்திரம் தீராத அவர்கள் அரிவாளால் நரேஷ்குமாரை சரமாரியாக வெட்டியதில், அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.  அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதேபோல் சசிகலாவும், கணவர் நரேஷ்குமார் தன்னை தாக்கியதில் காயமடைந்ததாக கூறி அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பாரூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நரேஷ்குமார் நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதையடுத்து பாரூர் போலீசார் கொலை வழக்கு பதிந்து, மருத்துவமனையில் இருந்த சசிகலாவை தேடியபோது அவர் தலைமறைவாகிவிட்டார். கொலையில் சசிகலாவின் உறவினர்கள் சிலருக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். குடும்ப தகராறில் ராணுவ வீரரின் கண்ணில் மிளகாய் பொடி தூவி, மனைவி மற்றும் அவரது உறவினர்கள் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Pochampally , Wife who slapped army soldier with a barrage of chilli powder near Pochampally: Atrocities with relatives when called to leave
× RELATED போச்சம்பள்ளியில் உள்ள பிரபல...