×

போச்சம்பள்ளி அருகே கண்ணில் மிளகாய் பொடி தூவி ராணுவ வீரர் வெட்டிக்கொலை: மனைவி வெறிச்செயல்

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பணந்தூர் இந்திரா நகரை சேர்ந்தவர் நரேஷ்குமார் (42). மேற்குவங்கத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சசிகலா (38). இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஊர்மக்கள் சமாதானப்படுத்தி வந்தனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறால் தம்பதியர் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மகனும், மகளும் சசிகலாவுடன் உள்ளனர்.
இதனிடையே பணிக்கு சென்றிருந்த நரேஷ்குமார், கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் மாலை மதுபோதையில் இருந்த நரேஷ்குமார் அதே பகுதியில் தனியாக வசித்து வரும் சசிகலாவின் வீட்டுக்கு சென்றார். குடும்பம் நடத்த வருமாறு சசிகலாவை அழைத்தார். மறுப்பு தெரிவித்தார். தகராறு ஏற்பட்டது.

வாய்த்தகராறு முற்றிய நிலையில் ஆவேசமடைந்த சசிகலா அங்கிருந்த மிளகாய் பொடியை எடுத்து நரேஷ்குமாரின் கண்களில் தூவினார். பின்னர் கட்டையால் சரமாரியாக தாக்கினார். இருந்தபோதும் ஆத்திரம் தீராத அவர், அங்கிருந்த அரிவாளால் நரேஷ்குமாரை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதேபோல் சசிகலாவும், நரேஷ்குமார் தன்னை தாக்கியதில் காயமடைந்ததாக கூறி அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பாரூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நரேஷ்குமார் இன்று அதிகாலை உயிரிழந்தார். இதையடுத்து பாரூர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, மருத்துவமனையில் இருந்த சசிகலாவை தேடினர். மாயமாகி விட்டது தெரிந்தது. இந்த கொலையில் சசிகலாவின் உறவினர்கள் சிலருக்கும் தொடர்பு இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள சசிகலாவை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் உறவினர்களில் யாருக்கு தொடர்பு உள்ளது எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags : Pochampally , Pochampally, chilli powder, sprinkle, soldier, murder
× RELATED போச்சம்பள்ளியில் உள்ள பிரபல...