மும்பை: சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் மும்பையில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் சகோதரி, கூட்டாளிகளின் வீடுகள் உட்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில் பதிவு செய்யப்பட்ட பணமோசடி வழக்கின் கீழ் இந்த சோதனை நடத்தப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிகளாக அடையாளம் காணப்பட்ட போதைப்பொருள் கடத்தல், ஹவாலா பரிவர்த்தனை, நில அபகரிப்பு வழக்குகளில் தொடர்புடைய பலர் இந்த சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். தாவுத் இப்ராகிம் சகோதரி மறைந்த ஹசீனா பார்கருக்கு சொந்தமான வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் சட்ட விரோத பணப்பரிவர்த்தனைகள் தொடர்பாக திரட்டப்பட்ட ஆதாரங்கள் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுவதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. மூத்த அரசியல் வாதிகள் சிலருக்கும் தாவூத்தின் சொத்து பரிவர்த்தனைகளில் தொடர்ப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது எனவும் அவர்களை கண்காணிக்கப்படுவதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் பஞ்சாப்பில் தாவூத்தின் சட்ட விரோத செயல்களை அரங்கேற்றிய நிறுவனம் ஒன்று கண்டறியப்பட்டது. 29 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தாவூத் கூட்டாளியான 1993 மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடைய அபுபக்கர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.