சென்னை: மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, மற்றும் காரைக்கால் உள்ளிட்ட தென் தமிழக மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், மாலத்தீவில் இருந்து வட கடலோர கர்நாடகா வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், இன்று தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மற்ற மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும். 15, 16, 17ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால்பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை 23 டிகிரி முதல் 31 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.