சென்னை: நாடாளுமன்றம், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது நடக்காத செயல் என்று எடப்பாடியின் பேச்சுக்கு திருநாவுக்கரசர் பதிலடி கொடுத்துள்ளார். தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்பி நேற்று சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதியில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தின் போது திருநாவுக்கரசர் பேசியதாவது:
சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி பகுதி ஆட்சிக்கு நெருக்கமான தொகுதி. இந்த பகுதியில் தான் முதல்வரின் மகனான உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அவரின் பதவி காலம் இன்னும் நான்கரை ஆண்டுகள் இருக்கிறது. அவரின் துணையுடன் இந்த பகுதிக்கு தேவையான நலத்திட்டங்களை மாமன்ற உறுப்பினர்களால் எளிதாக பெற்றுத்தர முடியும். தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலும், சட்டமன்ற தேர்தலும் ஒரே நேரத்தில் வரும் என்று கூறும் எடப்பாடி பழனிச்சாமியின் கருத்து நடக்காது. இதற்கான சாத்தியக்கூறு இப்போதைக்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.