செங்கல்பட்டு: மறைமலைநகர் நகராட்சி 12வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில், மறைமலைநகர் நகர திமுக செயலாளரும் முன்னாள் நகர மன்ற துனை தலைவருமான ஜெ.சண்முகம் போட்டியிடுகிறார். இவர் அதே பகுதியைச்சேர்ந்தவர் என்பதால் அனைவருக்கும் நல்ல அறிமுகமானவர். தொடர்ந்து அந்த வார்டில் வெற்றிப்பெற்று கடந்த 20வருடங்களாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை நிறைவேற்றியுள்ளார். நேற்று 12வது வார்டுக்கு உட்பட்ட பேயாழ்வார் தெரு, கண்ணகி தெரு, திருமங்கை ஆழ்வார் தெரு, திருத்தக்கதேவர் தெரு, நம்மாழ்வார் தெரு, சேரன், சோழன் பாண்டியன், தெரு உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்டோருடன் ஊர்வலமாக சென்று பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு தனக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். பொதுமக்கள் வேட்பாளரும் நகர செயலாளருமான ஜெ. சண்முகத்திற்கு பலத்த வரவேற்பு அளித்தனர்.
அப்போது அவர் பேசுகையில், ‘‘12வது வார்டு உட்பட்ட பகுதிகள் அனைத்திலும் பாதாள சாக்கடை திட்டம் முழுவதுமாக நிறைவேற்றப்படும். வார்டு முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட பாலாறு குடிநீர் வழங்கப்படும் .அடிப்படை வசதிகள் முழுவதும் நிறைவேற்றப்படும். நகராட்சியிலேயே 12வது வார்டு அனைத்து வசதிகளும் அடங்கிய முன்மாதிரியாக வார்டாக மாற்றப்படும். மகளிர் குழுக்கள் பயன்பெறும் வகையில் அரசிடமிருந்து சுழல் நிதி பெற்று தரப்படும். அவர்கள் சுய தொழில் தொடங்க தொழில் மையம் அமைக்கப்படும். இளைஞர்களுக்கு நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கப்படும்.’’ என்று பேசினார். இதில், திமுக, காங்கிரஸ், விடுதலைசிறுத்தைகள், மதிமுக கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.