புதுடெல்லி: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 15வது கூட்டம் நேற்று, அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் காணொலி மூலமாக நடைபெற்றது. இதில் கர்நாடகா, கேரளா, புதுவை மாநிலங்களின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பாக நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியன், குழுவின் உறுப்பினர் பட்டாபிராமன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மேகதாதுவில் புதிய அணை கட்டுவது தொடர்பாக னவிவாதிக்க கர்நாடக அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர்.
அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு அதிகாரிகள், ‘மேகதாது அணை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், இந்த அணை பற்றி இங்கு விவாதிக்கக் கூடாது’ என்றனர். இதனால், கர்நாடகா அதிகாரிகள் மவுனமாகி னர். மேகதாது அணை குறித்த விவாதம் தவிர்க்கப்பட்டது.
நீரை திறந்து விடுவதில் தாமதம் செய்ய கூடாது
கூட்டத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இந்த ஆண்டுக்கான நீர் பங்கீட்டை காவிரியில் இருந்து தமிழகத்திற்கு சரியான முறையில் வழங்கிட வேண்டும், முந்தைய காலகட்டத்தில் காலதாமதம் செய்து, நீரை திறந்து விடாமல் இருந்ததைப் போல் செய்யக் கூடாது என தமிழக அதிகாரிகள் வலியுறுத்தினர்.