திருமலை: ஆந்திராவில் உள்ள சினிமா தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பெரிய பட்ஜெட் படங்களின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரபல தெலுங்கு முன்னணி நடிகர்கள் சிரஞ்சீவி, மகேஷ்பாபு, பிரபாஸ், டைரக்டர்கள் ராஜமவுலி உள்ளிட்டோர் நேற்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனை விஜயவாடாவில் சந்தித்தனர். பின்னர் முதல்வர் ஜெகன்மோகன் பேசியதாவது: பெரிய படங்களுக்கும், சிறிய படங்களுக்கும் நல்ல வருவாய் கிடைக்கும் வகையில் ஒரு நல்ல கொள்கையை கொண்டுவர சில ஆண்டுகளாக முயற்சி நடந்துவருகிறது.
ஆன்லைனில் டிக்கெட் விற்பது அரசுக்கும், சினிமா தயாரிப்பாளர்களுக்கும் நல்லது என பார்த்தோம். ஆந்திராவில் படப்பிடிப்பை ஊக்குவிக்கும் வகையில் இங்கு படப்பிடிப்பு நடத்த வேண்டும். சினிமா துறை விசாகப்பட்டினத்துக்கு வர வேண்டும். தெலங்கானாவை விட ஆந்திரா, திரைத்துறைக்கு அதிக பங்களிப்பை வழங்குகிறது. எனவே இங்கு படப்பிடிப்பு நடத்த கவனம் செலுத்துங்கள். ஆந்திராவில் அதிக மக்கள்தொகை, அதிக பார்வையாளர்கள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகள் உள்ளன. சினிமாவுக்கான வருவாயிலும் ஆந்திரா முன்னணியில் உள்ளது. எனவே திரைப்படங்கள் எடுப்பதற்கான ஸ்டூடியோக்கள் அமைக்க ஆர்வம் இருந்தால் விசாகப்பட்டினத்திலும் இடம் வழங்கப்படும். ஐதராபாத் ஜூப்லி ஹில்ஸ் போன்ற ஒரு பகுதியை விசாகப்பட்டினத்தில் உருவாக்குவோம்.