தர்மபுரி : தர்மபுரியில் உள்ள மார்க்கெட், காய்கறி கடைகளில் அதிரடி ஆய்வு நடத்திய உணவு பாதுகாப்பு அதிகாரி, சாயமேற்றி விற்பனைக்கு வைத்திருந்த 50 கிலோ பச்சை பட்டாணியை பறிமுதல் செய்தார்.தர்மபுரியில் கலெக்டர் திவ்யதர்ஷினி உத்தரவின் பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பானு சுஜாதா தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குமணன், நந்தகோபால் ஆகியோர், தர்மபுரி பேருந்து நிலையம் அருகே உள்ள காய்கறி மார்க்கெட், சந்தைப்பேட்டை, கடைவீதி, பெரியார் சிலை தரை காய்கறி கடைகள் என 25க்கும் மேற்பட்ட இடங்களில் திடீர் சோதனை நடத்தினர். அங்குள்ள சாயமேற்றிய பச்சை பட்டாணியை விற்பனைக்கு வைத்திருந்தனர்.
இதையடுத்து 50 கிலோ பட்டாணியை பறிமுதல் செய்த அதிகாரிகள், விற்பனையில் ஈடுபட்ட 3 கடைகளுக்கு ₹10 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கூறுகையில், ‘காய்கறிகளில் செயற்கை நிறமேற்றக்கூடாது. அவ்வாறு நிறமேற்றப்பட்ட காய்கறிகளை தொடர்ந்து உண்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படக்கூடும். எனவே, செயற்கை நிறமேற்றப்பட்ட காய்கறிகளை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார்.