×

பட்டாக் கத்திகளுடன் சுற்றிய 6 பேர் கைது: 6 கிலோ கஞ்சா பறிமுதல்

செங்கல்பட்டு: பட்டாக்கத்திகளுடன் சுற்றிய 6 பேரை, போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 கிலோ கஞ்சா, 2 பைக் பறிமுதல் செய்யப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் கஞ்சா விற்பனை நடப்பதாக, மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தாம்பரம் கமிஷனர் ரவி உத்தரவின்படி, மறைமலைநகர் இன்ஸ்பெக்டர் முத்துசாமி, எஸ்ஐ வெங்கடேசன் தலைமையில், தனிப்படை போலீசார் மறைமலைநகர் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மறைமலைநகர் அடுத்த கீழ்க்காரணை பகுதியில் சந்தேகப்படும்படியாக சிலர் சுற்றித் திரிவதாக தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த 6 பேரை, மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை, காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த கௌரிசங்கர் (25), அரியலூர் முத்துமணி(29), திருவாரூர் பிரவீன் (30), தஞ்சை கார்த்திக் (25), சுமன் (23), இலங்கையை சேர்ந்த சைமன்ராஜ் (28) என தெரிந்தது.

மேலும் விசாரணையில், கீழ்க்காரைண அம்மன் கோயில் தெருவில் ஜனகராஜ் என்பவரது வீட்டில் வாடகைக்கு தங்கி, சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 6 கிலோ கஞ்சா, குட்கா, 2 பட்டாக்கத்திகள், 2 பைக் ஆகியவற்றை பறிமுதல்  செய்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் அடுத்த மொளச்சூர் சுடுகாடு பகுதியில், சுங்குவார் சத்திரம் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு, 2 வாலிபர்கள், சந்தேகப்படும்படி 2 பைக்குகளுடன் 4 பேர் நின்றிருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களை சோதனை செய்தனர். அப்போது, பைக்கில் கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து அவர்களை, பைக்குடன் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.
அதில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சித்தார்த் (29), சோகண்டியை சேர்ந்த அலெக்ஸ் (21), பள்ள மொளச்சூரை சேர்ந்த நவீன்குமார் (22), நரேஷ் (18) என தெரிந்தது. அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா மற்றும் 2 பைக்குகளை, போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags : 6 arrested for possession of 6 kg cannabis
× RELATED சேலம் மாவட்ட பாஜ தலைவர் மீது பெண்...