திருவனந்தபுரம்: நடிகை பலாத்கார வழக்கை விசாரிக்கும் டிஎஸ்பி உட்பட போலீசாரை கொல்ல சதித்திட்டம் தீட்டியது தொடர்பான வழக்கில் முன்ஜாமீன் கோரி நடிகர் திலீப் உள்பட 5 பேர் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் மீது பிப்ரவரி 2ம் தேதி தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகர் திலீப், அவரது தம்பி மற்றும் தங்கையின் கணவர் ஆகியோர் பயன்படுத்திய 6 செல்போன்களை இன்று காலை 10.15க்குள் நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தன்னுடைய செல்போன்களை மும்பையில் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பியிருப்பதால் கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்றும் திலீப் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அதை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது. இதற்கிடையே திலீப் மும்பைக்கு அனுப்பியிருந்த செல்போன்கள் இன்று அதிகாலை கொச்சிக்கு வந்தது. இதையடுத்து அந்த போன்களும், அவரது தம்பி மற்றும் தங்கையின் கணவர் பயன்படுத்தியவை என மொத்தம் 6 செல்போன்களையும் சீல் வைத்த கவரில் தன்னுடைய வக்கீல் மூலம் இன்று காலை உயர் நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து பிற்பகலில் இது தொடர்பான விசாரணை தொடங்குகிறது. இந்த விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.