நெல்ைல: பாளையங்கோட்டை தெற்கு பஜாரை சேர்ந்தவர் பொன்னுதாஸ் என்ற அபே மணி (38). இவரது மனைவி முருகம்மாள் (34). ஒரு மகள், மகன் உள்ளனர். அபே மணி பாளை பகுதி திமுக 24வது வட்ட செயலாளராக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று நடைபெறவிருந்த நெல்லை மத்திய மாவட்ட திமுக கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்க இருந்த அவர், நேற்று முன்தினம் இரவு பாளை பஜாரில் உள்ள கடைக்கு சென்று விட்டு பைக்கில் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது பின்தொடர்ந்து வந்த கார், உச்சிமாகாளி அம்மன் கோயில் அருகே அபே மணியின் பைக் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்தவரை, காரில் இருந்து இறங்கிய 7 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.
தகவல் அறிந்து விரைந்து வந்த மாநகர போலீஸ் கமிஷனர் துரைகுமார் மற்றும் போலீசார், அபே மணி உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக 6 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். மேலும் 4 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். குறிப்பாக பாளையில் டாஸ்மாக் பார் ஏலம் எடுத்தது தொடர்பாக, அல்லது மாநகராட்சி தேர்தலில் அவரது தாயை நிறுத்த நடவடிக்கை எடுத்துவந்தது தொடர்பாக அவரது வளர்ச்சியை பிடிக்காதவர்கள் இதில் ஈடுபட்டனரா? என விசாரணை நடக்கிறது.
அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த போது காரில் இருந்து இறங்கும் மர்ம நபர்கள், அபே மணியை வெட்டி சாய்த்து விட்டு அதே காரில் தென்காசி சாலையில் பயணிப்பது தெரிய வந்தது. பின்னர் அந்த கார் கண்டியப்பேரி சோதனை சாவடியை கடந்துள்ளது. எனவே அவர்கள், கேரளா தப்பிச் சென்றுள்ளனரா? அல்லது தென்காசி, பாபநாசம், அம்பை சுற்று வட்டாரத்தில் பதுங்கி உள்ளனரா என்பது குறித்தும் தனிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.