சென்னை: ரூ.29.09 கோடிக்கு போலி விற்பனை பட்டியல் அளித்து வரி ஏய்ப்பு செய்த 2 வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வணிகவரித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசின் வணிகவரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு வணிகவரி துறையினரால் புலனாய்வு மேற்கொள்ளப்பட்டதில் சென்னை கோட்டத்திற்குட்பட்ட கோல்டன் டிரேடர்ஸ் மற்றும் ராயல் டிரேடர்ஸ் என்னும் நிறுவனங்கள் சரக்குகளை வழங்காமல் போலி பட்டியல்கள் மூலம் பயனாளருக்கு மோசடியாக வணிகம் செய்வது தெரிய வந்தது.
அதனடிப்படையில் ஆணையர் பணீந்திர ரெட்டியின் ஆணையின்படி நுண்ணறிவு இணை ஆணையர் மற்றும், நுண்ணறிவு 11 அலுவலர்களால் போலிப் பட்டியல்கள் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 27 வணிகர்களின் வியாபார இடங்களில் சரக்கு மற்றும் சேவைகள் வரிசட்டத்தின்கீழ் திடீராய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது, கோல்டன் டிரேடர்ஸ் உரிமையாளர் யாசர் அராபத் என்பவர் ரூ.29.90 கோடி அளவிலும், ராயல் டிரேடர்ஸ் உரிமையாளர் ஜாகீர் உசேன் என்பவர் போலி ரசீதுகள் வழங்கி ரூ.5.16 கோடி மற்றும் ரூ.4.30 கோடி அளவில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி இருந்தது தெரியவந்தது. எனவே இந்த இரண்டு போலி வணிகரும் வணிகவரித்துறையின் நுண்ணறிவு அலுவலர்களால் கடந்த 10ம் தேதி கைது செய்யப்பட்டு பொருளாதார குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற சொரணைக்கு பின்பு இரண்டு வணிகர்களும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.