கோத்தகிரி: கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக ஈளாடா அணையில் இருந்து குடிநீர் பைப் மூலம் கொண்டுவரப்பட்டது. குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களான கேர்பெட்டா, டானிங்டன், ரைபிள்ரேஞ், ராம் சந்த், பஜார், கேஎம்எப்,மிஷன் காம்பௌண்டு, கன்னேரிமுக்கு, கார்சிலி, காம்பாய்கடை பகுதிகளில் உள்ள பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.10.60 கோடி மதிப்பீட்டில் அளக்கரை குடிநீர் திட்டம் கடந்த 27.02.2019 அன்று அமல்படுத்தப்பட்டது.
பின்னர் கோத்தகிரி சக்தி மலைப்பகுதியில் சுத்திகரிப்பு கிணறு அமைக்கப்பட்டு அங்கிருந்து கோத்தகிரி பொது மக்களுக்கு குடிதண்ணீர் விநியோகிக்கப்பட்டது. ஆனால் கடந்த 8 மாதங்களாக அளக்கரை குடிநீர் திட்டம் மூலமாக பொதுமக்களுக்கு குடிதண்ணீர் விநியோகிக்கப்படாததால் தற்போது கோத்தகிரி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் சூழல் உருவாகியுள்ளது.எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து கோத்தகிரி பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.