கண்ணமங்கலம்: சந்தவாசல் வனப்பகுதியில் முயலை வேட்டையாடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. சந்தவாசல் ரேஞ்சர் செந்தில்குமார் உத்தரவின்படி, வனவர் கருணாமூர்த்தி தலைமையில் வனக்காப்பாளர்கள் ரேணுகா, பரமேஸ்வரி, வனக்காவலர் மணி ஆகியோர், சந்தவாசல் காப்புக்காடு புனல் குட்டை பீட், புனல் குட்டை வழிச்சரகத்தில் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபரை மடக்கி சோதனை செய்தனர். அவரிடம் வேட்டையாடப்பட்ட முயல் மற்றும் அனுமதியில்லாத நாட்டுத்துப்பாக்கி இருப்பது தெரியவந்தது. அவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக கன்னிகாபுரத்தை சேர்ந்த சரத்குமார்(28) என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். பின்னர், அவரை போளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.