×

நேதாஜியின் கொள்கையை கடைபிடிப்போம்: ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதிமொழி

சென்னை: நேதாஜி சுபாஸ் சந்திர போஸின் 125வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று சென்னை, ஆளுநர் மாளிகையில் உள்ள அவரது திருவுருவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, இந்திய சுதந்திரத்திற்காக நேதாஜி ஆற்றிய அளப்பரிய பங்களிப்புகளை வியந்து போற்றினார். ‘ஒரு நபர் தன் கொள்கைக்காக உயிரையும் துறக்கலாம். ஆனால் அக்கொள்கையானது, அவரது மரணத்திற்குப் பின்னர், ஆயிரம் உயிர்களில் பிறப்பெடுக்கும்’ என்னும் நேதாஜியின் புகழ்பெற்ற மேற்கோள்களில் ஒன்றை ஆளுநர் எடுத்துரைத்தார். இதேபோல், சகோதரத்துவத்தை வலுப்படுத்தவும், நாட்டின் முன்னேற்றத்திற்கான நமது பார்வையை மேம்படுத்தவும் நமது இளைஞர்கள் மற்றும் மக்களை வலியுறுத்தினார். மேலும், நாடு முழுவதும் ‘சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவைக் கொண்டாடும் இத்தருணத்தில், ‘எப்போதும் தேசம் முதலில்’ என்கிற நேதாஜியின் கொள்கையைக் கடைப்பிடிப்பதாக உறுதிமொழி எடுப்போம் என்றும் அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் ஆளுநரின் முதன்மைச் செயலாளர், ஆனந்த்ராவ் வி.பாட்டில், சென்னை ஆளுநர் மாளிகை உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Netaji ,Governor ,RN ,Ravi , We will follow Netaji's policy: Governor RN Ravi pledges
× RELATED பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து