×

தஞ்சை பள்ளி மாணவியின் உடலை பெற்றோர் பெற்றுக்கொண்டு இறுதிச்சடங்கு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

மதுரை: தஞ்சை பள்ளி மாணவியின் உடலை பெற்றோர் பெற்றுக்கொண்டு இறுதிச்சடங்கு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மாணவி உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய தேவையில்லை என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மாணவி தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரிக்க கோரிய வழக்கு திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அவசர வழக்காக இந்த வழக்கை விடுமுறை நாளான இன்று விசாரித்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் +2 படித்துக்கொண்டிருந்த மாணவி தனது பள்ளியின் விடுதியில் கடந்த 9ஆம் தேதி விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்பு அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு 2 தினங்களுக்கு முன்பாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் மாணவியின் மரணம் குறித்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தரப்பில் பள்ளியின் நிர்வாகம் மாணவியை மதம் மாற சொல்லி கொடுமைப்படுத்தியதால் தான் மாணவி இறந்துள்ளார். எனவே இந்த வழக்கை தஞ்சை மாவட்ட போலீசார் முறையாக விசாரணை செய்யவில்லை.

மாணவியின் பெற்றோர் அனுமதியின்றி மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த விசாரணையை நாங்கள் ஏற்றுக்கொள்ளும் விதமாக இல்லை. இந்த வழக்கை பொறுத்தவரை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் அல்லது சி.பி.சி.ஐ.டி.க்கு இணையான ஒரு தனிப்பிரிவு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தான் மாணவியின் தந்தை முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை நேற்று விசாரணைக்கு எடுத்த நீதிபதி சாமிநாதன் வழக்கு தொடர்பாக விரிவான விசாரணை திங்கட்கிழமை நடைபெறும் என்று நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால் இந்த வழக்கை அவசர வழக்காக மீண்டும் விசாரணைக்கு பட்டியலிட்ட நீதிபதி சாமிநாதன் தற்போது விசாரணை மேற்கொண்டார். அப்போது மனுதாரர் தரப்பில் மாணவியின் இறப்பில் மர்மம் உள்ளது. மாணவியை மதம் மாற சொல்லி பள்ளி நிர்வாகம் துன்புறுத்தியதால்தான் விஷமருந்தி தற்கொலை செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் வைத்தார். ஆனால் இது அரசு தரப்பில் முற்றிலுமாக மறுக்கப்பட்டது. மாணவியின் மரண வாக்குமூலம் தெளிவாக உள்ளது. மாணவி நிர்வாகம் ரீதியில் தன்னை வேலை செய்ய சொல்லியதால் தான் தற்கொலை முயன்றதாகவும், விஷமருந்தியதை யாரிடமும் சொல்லவில்லை என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பட்டுள்ளார். மாணவியின் வழக்கு விசாரணை தெளிவாக உள்ளது. எனவே இதனை வேறு பிரிவுக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை என்பதையும் தெரிவித்தார்.

மாணவியின் பிரேத பரிசோதனை நிபுணத்துவம் கொண்ட மருத்துவர்களால் செய்யப்பட்டுள்ளது . அதிலும் எந்த சந்தேகமும் இல்லை என்று எடுத்துரைத்தனர். இரண்டு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி அவர்களின் பெற்றோரை வீடியோ கான்பரன்ஸில் வர சொல்லி பெற்றோருக்கு ஏதேனும் சந்தேகம் உள்ளதா என்று கேட்டறிந்தார். அப்போது மாணவின் பிரேதபரிசோதனையில் எந்த சந்தேகமும் இல்லை என்று பெற்றோர் தெரிவித்ததை அடுத்து நீதிபதி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். மாணவியின் உடலை உடனடியாக பெற்றுக்கொண்டு இறுதிச்சடங்கு செய்யலாம் என்று தெரிவித்துள்ளார். அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும்.

குறிப்பாக தஞ்சையில் இருந்து அரியலூர் மாவட்டத்திற்கு எடுத்து செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். மாணவியின் இறுதி சடங்கை இன்று முடித்துவிட்டு நாளை தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும். என்ன நடந்ததோ அனைத்தையும் பதிவு செய்ய வேண்டும். வாக்குமூலத்தை பதிவு செய்த நீதிபதி வருகின்ற திங்கட்கிழமை 4 மணிக்குள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags : High Court , Tanjore, school, student
× RELATED அரசு பேருந்துகளின் வகையை...