காஞ்சிபுரம்: தொழில் நிறுவனங்கள் வரும் 31ம் தேதிக்குள் ஆண்டறிக்கையை அனுப்ப வேண்டும், என மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) லிங்கேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிலாளர் நலத்துறையின் கீழ் பதிவு செய்துள்ள கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள் உள்ளிட்டவை தங்களின் 2021ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த ஆண்டறிக்கையை ஜன.31ம் தேதிக்குள் http://labour.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அனுப்ப வேண்டும். நேரடியாக அச்சு நகல்களை காஞ்சிபுரம் மாவட்ட அலுவலகத்திற்கு அனுப்பக் கூடாது. மேலும் அனைத்து தொழில் நிறுவனங்களும் தொழிலாளர் நலத்துறையின் கீழ் பதிவு செய்யவும், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட உரிமங்களை புதுப்பிக்கவும், உரிம கட்டணங்களை செலுத்தவும் மேலே குறிப்பிட்டுள்ள இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.